
சிலசமயம் மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது கணினி அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.அதாவது எதிர்பாராத விதமாக செயலிழந்து போகலாம், இமெயிலில் இருந்து ஏதாவது ஒன்றை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய் விடலாம்.இத்தகைய சோதனைகளால் காரணமே தெரியாமல் கணினி மீதே வெறுப்பு ஏற்பட்டுவிடும் .கணினி கில்லாடிகள் என்றால் உடனே எதாவது செய்து கணினியை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப் போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கணினிக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ என்ற பதட்டம் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.
அதன் பிறகு பார்த்தால் சாதாரண பிரச்சனையாக இருக்கும். சின்ன திருத்ததிற்கு பிறகு பழையபடி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆனால் சமயங்களில் கோளாறுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கணினி கில்லாடிகளே திணறிப்போய் விடுவார்கள்.
இப்படி கணினி பயனாளிகளை விரக்தியில் ஆழ்த்தி வெறுப்படைய வைக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் நிறுவனம் ஒன்று புதிய மென்பொருளை அறிமுக செய்துள்ளது. சொல்யூட்டோ என்னும் அந்த மென்பொருள் கணினி சார்ந்த விரக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வல்லது என வர்ணிக்கப்படுகிறது.
சொல்யூட்டோ மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டீர்கள் என்றால் கணினி தொடர்பான கவலைகளை மறந்து விடலாம்.அதன் பிறகு உங்கள் கணிக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த மென்பொருள் ஒரு நல்ல நண்பனைப்போல உங்கள் நடவடிக்கையை கண்கானித்து கொண்டேயிருக்கும்.கணினியில் ஏதாவது எதிர்பாராத பிரச்சனை அல்லது வழக்கமான பிரச்சனை என்றாலோ ஒரு நல்லாசிரியனை போல இந்த மென்பொருளே அதற்கான தீர்வை சொல்லிவிடும்.
நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கணினியில் பணியாற்றலாம். பின்னணியில் கவனித்துகொண்டிருக்கும் சொல்யூட்டோ வேகம் குறைவதையோ,செயலிழப்பதையோ பார்த்துக்கொள்ளும்.
சொல்யூட்டோ கொஞ்சம் சுவாரஸ்யமானது.கண்கொத்தி பாம்பு போலவே சொல்யூட்டோ கணினி பயன்படுத்துபவரின் ஒவ்வொரு கிளிக்கையும் கவனித்துக்கொண்டே இருக்கும்.ஏதாவது சிக்கல் என்றால் சட்டென்று கண்டுபிடித்துவிடும்.உதாரணத்திற்கு திடிரென மீண்டும் மீண்டும் கிளிக் செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம்,எதிபார்த்த பயன் கிடைக்கவில்லை என சொல்யூட்டொ ஊகித்து ,அதற்கான காரணத்தை அறிந்து மாற்று நடவடிக்கையை பரிந்துரைக்கும்.அது மட்டும் அல்ல ஏதாவது பிரச்சனை என்றால் அதனை சொல்யூட்டோவிடம் தெரிவித்தால் அதற்கும் தீர்வை பரிந்துரைக்கும்.
சிலசமயங்களில் கணினியில் பிரச்சனை எற்படும் போது விடயம் அறிந்த பயனாளி தானே அதனை சரி செய்து விடலாம். அல்லது சாதாரண பயனாளியே கூட சோதனை முறையில் எதையாவது செய்து பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.இவற்றை எல்லாம் சொல்யூட்டோ கவனிக்கும்.அப்படியே விசுவாச ஊழியனை போல நிறுவனத்தின் மைய காப்பகத்திற்கு இந்த குறிப்புகளை அனுப்பி வைக்கும்.
இது உளவு வேலையாக தோன்றலாம்.ஆனால் இப்படி சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த முறை உங்கள் கம்ப்யூட்டரில் அதே போன்ற பிரச்ச்னை ஏற்பட்டால் அதற்குண்டான பொருத்தமான தீர்வை சொல்யூட்டோ எடுத்துவிடும்.அந்த வகையில் சொல்யூட்டோவின் புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகக் கூடியது.கிட்டத்தட்ட இரண்டரை வருட ஆய்விற்கு பிறகு சொல்யூட்டோ உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மென்பொருள் பொருத்தினால் என்ன ஆகும்,பாடல் தரவிறக்கம் செய்யும் போது என்ன நடக்கும் ,திடிரென வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் விழித்துகொண்டால் என்ன ஆகும் என்றெலாம் இதற்கு அத்துபடி.அந்த அடிப்படையில்பிரச்சனை ஏற்படும் போது பின்னணி குரல் கொடுத்து காப்பாற்றும் .அதோடு மற்ற கணினிகளில் கையாளப்படும் வழிகளையும் நினைவில் சேகரித்து கொண்டு தனது அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்கும்.
கணினி சார்ந்த விரக்திக்கு எதிரான மென்பொருள் என்னும் அடைமொழியோடு அறிமுகமாகியுள்ள சொல்யூட்டோவை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கட்டணம் செலுத்தினால் பிரச்சனைக் காலத்தில் அதுவே தீர்வுகளையும் செயல்படுத்திவிடும்.
அருமையான் மென்பொருள்தான் .ஆனால் ஒரு உளவாளியை போல நமது கணினிக்குள் அனுமதிக்க வேண்டியது பற்றியும்,அனைத்து நடவடிக்கைகளையும் குறித்தும் சேமித்து கொள்வதால் கொஞ்சம் சந்தேகம் ஏற்படலாம்.
ஆனால் கணினியின் பொதுவான செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறதே தவிர பயனாளியின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை என சொல்யூட்டோ நிர்வாகம் உறுதி அளிக்கிறது.
http://www.soluto.com/என்ற லிங்கினூடாக சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்